இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள்
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) நாடு முழுவதும் தொடங்கிய சமுதாயக் கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் இரண்டு லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இத்தகவலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை தெரிவித்தார்.
இக்னோவுடன் இணைந்து 600 சமுதாயக் கல்லூரிகள் இயங்குகின்றன. இக்கல்லூரிகளில் தொழிற்கல்வி, செயல்முறைப் படிப்பு ஆகியவை நடத்தப்படுகின்றன. பள்ளிப் படிப்பை அடுத்து, இத்தகைய தொழிற்படிப்புகளில் சேர்ந்து படித்தால், வாழ்க்கைக்கு அது பெரிதும் உதவும். இத்தகைய கல்விமுறை உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றார் ராஜசேகரன் பிள்ளை. திறந்தநிலைக் கல்வி, வசதியான கால அளவுத் திட்டம், தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கற்பித்தல் முறை, தொலைநிலைக் கல்வி முறை ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். இக்கல்லூரிகள் உயர்நிலைக் கல்விக்குச் சரியான மாற்று ஏற்பாடாகவே அமைந்துள்ளன என்றார் துணைவேந்தர்.
நாட்டிலேயே முதல் முதலாக இக்னோ சார்பில் புதுவைப் பல்கலைக்கழகத்தில்தான் சமுதாயக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு தொடங்கிய எல்லா பல்கலைக்கழகங்களும் தலா 10 சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்குவது என முடிவு செய்துள்ளன என்றும் ராஜசேகரன் பிள்ளை கூறினார். சமுதாயக் கல்லூரிகளில் இரண்டாண்டுக்கு மேல் படிப்பைத் தொடர இயலாவிட்டால், இரண்டாம் ஆண்டுத் தேர்வுகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு இணைப் பட்டப்படிப்பு (அசோசியேட் டிகிரி) வழங்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக