செவிலியர் படிப்பில் சேர இன்றுமுதல் விண்ணப்பம்
தமிழகத்தில் பி.எஸ்ஸி. (நர்சிங்), பி.ஃபார்ம் (மருந்தியல்), பி.பி.டி. (பிஸியோதெரப்பி), பி.ஏ.எஸ்.எல்.பி. (காது மருத்துவம் தொடர்புடைய கேட்பியல்-பேச்சியல் படிப்பு) ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க புதன்கிழமை (மே 18) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி உள்பட தமிழகத்தில் பல இடங்களில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களைப் பெறலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஜூன் 2-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.
எத்தனை இடங்கள்?
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மொத்தம் 175 பி.எஸ்ஸி. (நர்சிங்) இடங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி செவிலியர் கல்லூரிகளில் 5,000-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.எஸ்ஸி. (நர்சிங்) இடங்கள் உள்ளன; அரசு ஒதுக்கீட்டு பி.எஸ்ஸி. (நர்சிங்) இடத்துக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.30,000. சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மொத்தம் 110 பி.ஃபார்ம். படிப்பு இடங்கள் உள்ளன. இது தவிர சுயநிதி கல்லூரிகளில் 700-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.ஃபார்ம். இடங்கள் உள்ளன.
சென்னை கே.கே.நகர் அரசு மறுவாழ்வு மருத்துவ மையம், திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மொத்தம் 50 பி.பி.டி. (பிஸியோதெரப்பி) இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லூரிகளிலும் 700-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.பி.டி. இடங்கள் உள்ளன. பி.ஏ.எஸ்.எல்.பி. படிப்பு: காது மருத்துவம் தொடர்புடைய பி.ஏ.எஸ்.எல்.பி. ("பாச்சுலர் ஆஃப் ஸ்பீச் லேங்குவேஜ் பதாலஜி') படிப்பு, கடந்த ஆண்டு சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் 25 இடங்களுடன் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டும் 25 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்த பட்டப்படிப்பில் சேர, பிளஸ் 2 பாடத் திட்டத்தில் உயிரியல் பாடத்தைப் படிக்காமல் கணிதம்-இயற்பியல்-வேதியியல்-கம்ப்யூட்டர் அறிவியல் பாடங்களைப் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஜூலையில் தரவரிசைப் பட்டியல்:
மேலே குறிப்பிட்ட பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூலையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும் என்றார் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி